தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பிரச்சார பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் துரை. சந்திரசேகர் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
அதன்படி, காலை 8 மணிக்கு மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன் வாயல் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதாக இருந்தது. மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் காலை 8 மணி முதல் திமுக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிய ஆரம்பித்தனர்.

இதனால், காலை 8 மணி முதலே வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும் வேட்பாளர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால் மேலும் கூட்டம் அதிகமாகி மீஞ்சூர் பழவேற்காடு நெடுஞ்சாலையிலும், மீஞ்சூர் ரயில்வே கேட் பகுதியிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் தேர்வு நேரமான இந்த நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் வாகனங்களில் மாணவ, மாணவிகள் தத்தளித்தனர்.

மேலும், ரயில் நிலையம் அருகில் உள்ளதால் இப்பகுதியில் பல்வேறு கிராமங்களில் இருந்து பணிக்கு செல்லும் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் அவதியுற்றனர். இதனால் பள்ளி கல்லூரி பணிகளுக்கு காலதாமதமாக போகக்கூடிய சூழல் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் செல்வோரும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரும் திட்டிக்கொண்டே செல்வதை கண்ட மக்கள் நீதி மையம் மற்றும் திமுக நிர்வாகிகள் சிலர் வாகன போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருந்தாலும் போக்குவரத்தை சரி செய்ய இரண்டு மணி நேரம் ஆனது. போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் பரப்பான நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

எதிரொலி / 8939476777
