தமிழ்நாட்டில் 1987 ம் ஆண்டில் இருந்து பனை மரங்களிலிருந்து கள் இறக்க கூடாது என முன்னாள் முதல் எம்ஜிஆர் அவர்கள் உத்தரவிட்டார். ஆனால், பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்குவதற்கும், அதிலிருந்து, கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட மற்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செய்வதற்கும் எந்த விதமான தடையும் அவர் விதிக்கவில்லை, ஆனாலும், பனைமர தொழிலாளர்கள் பதநீரை இறக்குவதற்கு பதிலாக, கள்ளை இறக்குகின்றார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து, கள்ளிற்கு தடை விதித்த காலகட்டத்தில் இருந்து, இன்று வரை, பனை தொழிலாளர்கள் பனைமரம் பக்கம் கூட செல்ல முடியாத சூழ்நிலை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில்,
தமிழக அரசு பனை சார்ந்த தொழில்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
அதன்படி, தமிழக முதல்வர் அவர்கள் தமிழ்நாட்டில் பனை விதைகளை விதைப்பதற்கு தோட்டக்கலை துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய 12,500 ஊராட்சிகளிலும் பனை விதைகளை விதைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார்.

அதேபோல், பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்குவதற்கும் பனைத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கி அதன் மூலம் அவர்கள் பதநீர் உற்பத்தி செய்து, அதிலிருந்து கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளலாம் எனவும், மேலும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் ஊக்கமளிக்கும் வகையில் திட்டங்களை வகுத்து அனுமதியும் வழங்கி இருக்கிறார்.

மேலும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், பனை தொழிலாளர் துறையின் மூலம் பனை வாரியத்தையும் உருவாக்கி பனைத் தொழிலாளர்களுக்கு இழப்பீடுகள் மற்றும் அவர் குடும்பத்தினர்களுக்கு பல கட்டங்களாக உதவிகளையும் வழங்குவதற்கு திட்டங்களை வகுத்திருக்கிறார்.
இந்நிலையில், பனை விதைப்பு பணிகளை தோட்டக்கலை துறையின் கீழும், பனை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி மற்றும் கைவினை பொருட்கள் உற்பத்தி, ஆகியவை கதர் மற்றும் காதி துறையின் கீழும், பனைத் தொழிலாளர்களுக்கு உதவிகள் மற்றும் அவர்கள் பாதுகாப்பு போன்றவை தொழிலாளர் நலத்துறையின் கீழும் உள்ளன.

அதனால், அந்த மூன்று துறைகளிலும் முக்கிய பணிகள் வேறு பணிகள் சார்ந்து இருப்பதால், பனை சார்ந்த பணிகளை, அந்த மூன்று துறை அதிகாரிகளும் பெரிய அளவில் ஈடுபாடுடன் செய்வது கிடையாது.
ஆகவே, அந்த மூன்று துறையின் கீழ் இயங்கக்கூடிய அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து, பனை சார்ந்த அனைத்து பணிகளையும் நன்றாக வரைமுறைப்படுத்தி, பனை விதைப்பு பணிகளுக்களையும், பனையின் மூலம் கிடைக்கக்கூடிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியையும், கைவினைப் பொருட்களின் உற்பத்தியையும், தொழிலாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு பணிகளையும் ஒருங்கிணைத்து, அந்த மூன்று பணிகளையும் சீராக செய்வதற்கு பனைவளத்துறை என்ற தனித்துறையை தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும் என, மக்கள் நலப்பணி இயக்கத்தின் சார்பில் தமிழக அரசிடம், பல ஆண்டுகளாக கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வருகின்ற மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை தயார் செய்து கொண்டு இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளையின் சார்பில், அறக்கட்டளையின் தலைவர் பி.ஜி.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர், டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களுடன் சென்று, விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்து, விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் சார்பில் தயாரிக்க கூடிய தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில், பால்வளத்துறை, மீன்வளத்துறை போன்று, பனைவளத்துறை என்ற தனித்துறையை தமிழக அரசு உருவாக்குவதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி பரிந்துரைக்கும் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

அப்போது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பனை மரங்களை பாதுகாக்கப்படுவது, மற்றும், வருங்காலத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு ஊராட்சியிலும் பனை மரங்களை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் பனை சார்ந்த தொழில்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் மற்றும் பனைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும், கனிவுடன் கேட்டறிந்தார்.

மேலும், ” பனை சார்ந்த தொழில்களை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்கி, அதன் மூலம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து ஏழை, எளிய மக்களும் வருங்காலத்தில், தற்சார்பு பொருளாதார வளர்ச்சி அடைய நான் துணை இருப்பேன்” என உறுதிப்பட கூறினார்.

எதிரொலி / 8939476777
