​மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலங்காநல்லூர் அருகே உள்ள எரம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்கள் அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

​அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, ஏராளமான இளைஞர்கள் மருத்துவமனைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால், பணியில் இடையூறு ஏற்பட்டதாலும், மருத்துவமனைக்குள் அதிக நபர்கள் வரக்கூடாது என மருத்துவர்கள் அவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.

அப்போது, மது போதையில் இருந்த இளைஞர்கள், “என் நண்பனை விட்டு எப்படி வெளியேறுவது?” என்று கேட்டு மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மருத்துவமனைக்கு வெளியே வந்த அந்த இளைஞர்கள், அங்கிருந்த மருத்துவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்று மதுபோதையில் இளைஞர்கள் அட்டகாசம் செய்யும் நிகழ்வுகள் அலங்காநல்லூர் பகுதியில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed