விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லதங்காள் கோயில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு பிரச்சனை, சர்ச்சைகளுக்கு மத்தியில் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து பலத்தபோலீஸ் பாதுகாப்புடன் கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலை அதை ஒட்டியுள்ள அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் நிர்வகித்து வந்தனர். நன்கொடை வசூல் மூலம் கோவிலை புனரமைத்தனர். புதிய மண்டபம் அமைத்தனர்.
இந்நிலையில், 2025 ஜனவரியில் நல்லதங்காள் சிலை சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டது. இக்கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக அர்ச்சுனாபுரம் மற்றும் அதன் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பாலாலயம் செய்து புதிய சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி பணிகள் நடந்து சிலையை பிரதிஷ்டை செய்யவும் கும்பாபிஷேகம் நடத்தவும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இதனை எதிர்த்து அணைக்கரைப்பட்டி ஊர் மக்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் அறநிலையத்துறையினர் மற்றும் அர்ச்சுனாபுரம் கிராமத்தினர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதனை நிறுத்த கோரி அணைக்கரைப்பட்டி மக்கள் விருதுநகரில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். இந்நிலையில் புதிய சிலை பிரதிஷ்டைக்காக கோவில் அருகே கொண்டு சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கும்பாபிஷேகம் பணிகள் தடைபட்டது. இரு கிராமத்தினர் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து ஏராளமான போலீசார் கோவிலை சுற்றிலும் அவ்விரு கிராமங்களை சுற்றிலும் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அனைவரும் ஒன்றிணைந்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு கும்பாபிஷேக பணிகள் துவங்கின.

முதல் நாள் நல்ல தங்காள் மற்றும் இதர பரிவார தெய்வங்கள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தொடர்ந்து யாக சாலைகள் பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணைக்கரைப்பட்டி, அர்ச்சுனாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் பங்கேற்புடன் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கோவில் தக்கார் கோ. தேவி சிரிய முயற்சியால் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. கும்பாவிஷேக விழாவில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்,
அறநிலையத்துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகம் முடிந்தாலும் தொடர்ந்து கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
