ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நவீன அரிசி ஆலை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான உணவுப் பயிராக நெல் பயிர் சுமார் 1,35,000 ஹெக்டேர் பரப்பரளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சன்ன இரகங்கள் மட்டுமல்லாது உள்ளூர் இரகங்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. அறுவடை செய்யப்படும் நெல்லினை பருவங்களில் நிலவும் சந்தை விலையினைப் பொறுத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லினை விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு மாவட்டத்தில் 46,988 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லானது அரவைக்காக அருகில் உள்ள மதுரை, சிவகங்கை , தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவீன அரிசி அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை மாறுதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் கொள்முதல் பணி தொய்வடைகிறது. இதனை தவிர்த்திட ராமநாதபுரம் மாவட்டத்திலேயே நவீன அரிசி ஆலை அமைத்திட நீண்ட காலமாக விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.
இதனை நிவர்த்தி செய்திடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதத்தில் முதல் கட்ட கலந்தாய்வுக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.சிவகுரு பரசுராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் , நவீன அரிசி ஆலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்தல் , அதற்குரிய முன்மொழிவு தயார் செய்வது குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் , ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் நா.அருண் பிரசாத் , வேளாண்மை இணை இயக்குநர் ம.தி.பாஸ்கரமணியன் , மாவட்ட ஆட்சியரின் விவசாயம் நேர்முக உதவியாளர் சு.வாசுகி , வேளாண்மை துணை இயக்குநர் வேளாண் வணிகம் கோபாலகிருஷ்ணன் , ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா , மதுரை நவீன அரிசி ஆலை உதவிப் பொறியாளர் ஆர்.சுந்தரமூர்த்தி , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் முருகேசன் , விவசாய சங்க பிரதிநிதிகள், செய்தி- மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
