பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 222 மாணவ – மாணவிகளுக்கு, ” கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை ” சார்பில் கல்விச்சீரும், உதவித்தொகையும் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் “கற்கை நன்று கிராமக் கல்வி கட்டளை” சார்பில் ஆண்டுதோறும் ஏழை,எளிய மாணவர்களுக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த 2026 – 27 கல்வி ஆண்டிற்கும் கல்வி சீர் வழங்கும் விழா, 8-வது ஆண்டாக நடைபெற்றது.


இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளான வடிவேல் கார்த்திக் நவீன் ஆகியருடைய தீவிர முயற்சியின் மூலம் முதன் முதலில் வஞ்சிவாக்கம், பிரளையம்பாக்கம், போன்ற கிராமங்களில் மாலை நேர வகுப்புகள் நடத்தி அதன் மூலம் முதன் முதலாக, 2019 ம் ஆண்டில் இவர்கள் அக்கிரமங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி சீர் வழங்க துவங்கினர்.


மேலும், இவர்கள் நடத்தக்கூடிய மாலை நேர வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடியவர்களுக்கு அவர்களை பாராட்டி பரிசு பொருட்களை வழங்கினர். அதில், பேனா பென்சில் போன்ற எழுது பொருள்களில் துவங்கி, கை கடிகாரம், சைக்கிள்கள், லேப்டாப் உட்பட பல விலை உயர்ந்த பரிசு பொருட்களும் வழங்கி நன்றாக படிக்கக்கூடிய மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
பரிசுப் பொருட்கள் வழங்குவது மட்டுமல்லாமல், இந்த கல்வி சீர் வழங்குவதையும்
படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான மாணவ மாணவிகளுக்கு இந்த உதவிகளை வழங்கக்கூடிய பணிகளை விரிவுபடுத்தினர்.


தற்போது இந்த கல்வியாண்டில் பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய, ஏழை – எளிய மற்றும் பெற்றோர்களை இழந்த 222 மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணம் மற்றும் புத்தகப்பை, நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் தலைமை அழைப்பாளர்களாக சதீஷ்குமார் (முதல்வர் ஆதர்ஷ் குளோபல் வித்யாஷ்ரம்), அருள்தாஸ் (மாநில அமைப்பு செயலாளர், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச்சங்கம்), ஆனந்தபாபு (தாளாளர், சத்தியஜோதி மெட்ரிகுலேஷன் பள்ளி) ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி சீர் வழங்கி அவர்கள் மேலும் நன்றாக படிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி பேசினர்.


இந்த நிகழ்ச்சி, கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை தலைவர் வடிவேல் செயலாளர் கார்த்திக் பொருளாளர் நவீன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அன்புக்கொடி நல்ல தம்பி குடும்பத்தினர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் இளஞ்செழியன், சின்னக்காவணம் வள்ளலார் தாயார் சின்னம்மையர் இல்லம் ரவி, கிராம பார்வை நிறுவனர் முருகன், மேலூர் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் கோபாலகிருஷ்ணன், SEED நிறுவனர் அவிநாசி கலராணி, சென்னை அகர்துளிர் அறக்கட்டளை, பொன்னேரி லயன்ஸ் கிளப், மெதூர் சமூக ஆர்வலர் சேகர், திருவெற்றியூர் சமூக ஆர்வலர் ஆனந்த் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்விசீரை வழங்கினர்.



முன்னதாக, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் இளஞ்செழியன் அவர்களுக்கு கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பாக “சமூக நீதி போராளி” விருது வழங்கப்பட்டது. விருதை இளஞ்செழியன் மற்றும் அவருடைய துணைவியார் நிர்மலா தேவி ஆகியோர் பெற்று கொண்டனர். பின்னர், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.


செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476777
