மாணவர்களின் மோதலை தடுக்க ஆசிரியைகளில் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்…
மதுரை மாவட்டம் பாலமேட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர்கள் இடையே வகுப்பறையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில், மோதலை தடுக்க சென்ற ஆசிரியைகள் மீதும் மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் நிலையில், மாணவர்கள் தாக்கியதால் காயம் அடைந்த ஆசிரியை ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பள்ளி வளாகத்திற்குள் கஞ்சா போன்ற போதை வஸ்துகள் சர்வ சாதாரணமாக புலங்குவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பாலமேடு அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 40க்கு மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் வகுப்பறைக்குள் மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். பின்னர் வகுப்பறையை விட்டு பள்ளி வளாகத்திற்கு வந்தவர்கள் செங்கல், கற்கள், கம்புகளை கொண்டு தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது தடுக்க சென்ற ஆசிரியை மாணவர்கள் தாக்கியதால் காயம் அடைந்துள்ளார். மேலும், இருவர் காயம் அடைந்துள்ள நிலையில், பலத்த காயமடைந்த ஆசிரியை ஒருவர் மட்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தலைமை ஆசிரியர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு மோதலில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றும் இதே போல் மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் மற்ற மாணவர்கள் மத்தியில் ஒரு வித பீதியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், பி.டி.ஏ மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பதில்லை எனவும், பள்ளி வளாகத்திற்குள் கஞ்சா உள்ளிட்ட போதை தரும் பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பாலமேடு காவல்துறையினர் உரிய விசாரணை செய்து மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும் தவறு செய்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை செய்தியாளர் : காளமேகம் / எதிரொலி / 8939476777
