ரீல்ஸ் போடுவதிலும் தன்னை விளம்பரப்படுத்துவதிலும் தான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனம் உள்ளதாக கடலூரில் அன்புமணி பேச்சு…

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இன்றைய தினம் மாநிலம் முழுக்க உள்ள வருவாய் மாவட்ட தலைநகரங்களில் திமுக அரசிற்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ளது. 4 முனை போட்டியோடு தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 -ஆம் தேதி நடைபெறும் எனவும், மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சியின் தேர்தல் வேலைகள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், பரப்புரை நிகழ்வுகள், விருப்பமனு நேர்காணல்கள் என பிசியாக இயங்கி வருகின்றன.

இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்பட்ட பிறகு அந்த கூட்டணி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை எதிர்த்து மாநிலம் முழுக்க உள்ள வருவாய் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் போராட்டம் மேற்கொண்டார். இந்த போராட்டத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்று இருக்கின்றன.

மதுரையில் நயினார் நாகேந்திரன் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியிருக்கிறார். தஞ்சையில் டிடிவி தினகரனும், கடலூரில் அன்புமணியும் அண்ணாமலை வேலுமணி ஆகியோர் கோவையிலும் போராட்டத்தை முன்னெடுத்து சென்றிருக்கின்றனர்.

இந்த போராட்டத்தை கடலூரில் தலைமையேற்று வழி நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பேசுகையில் “தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் போதைப்பொருள் பழக்கம் இவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் எனவும் மூன்று குழந்தைகளை பெற்ற தந்தையாக சொல்கிறேன் இது மிக மோசமான ஆட்சி எனவும் அவர் விமர்சித்திருந்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு 38 குழந்தைகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும் தரவுகளின் அடிப்படையில் தான் இந்த கருத்துக்களை முன் வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் திமுக ஆட்சியாளர்கள் ஆட்சி செய்ய தகுதியற்றவர்கள் என விமர்சித்திருந்த அவர், பெண்களுக்கு எதிராக 44,000 குற்றங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது எனவும் இதற்கு காரணம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தான் எனவும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும் 22 லட்சம் கிலோ கஞ்சா தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது ஆனால் முதல்வரோ சூட்டிங், ரீல்ஸ், என விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு இதுவரை பார்க்காத ஒரு மோசடி ஆட்சி என்றால் அது திமுக ஆட்சிதான் எனவும் விரைவில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் எனவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் பாமக தலைவர்
அன்புமணி ராமதாஸ்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *