மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சுமார் 3000 க்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் வயிற்றுப்போக்கு காரணமாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளாகவும் அதில் சுமார் 20 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.


அதாவது தினசரி ஐந்துக்கும் மேற்பட்டோர் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக 10 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக முள்ளி பள்ளம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் செல்ல வழி இல்லாத நிலையில் தினசரி காலையில் திறக்கப்படும் குடிநீரானது தேங்கி கிடக்கும் கழிவு நீரில் கலப்பதால் அந்த குடிநீரை பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காய்ச்சல் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.


குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில் என்ன காரணம் என தெரியாத நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு இருப்பதாக கூறுகின்றனர் இது சம்பந்தமாக நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் இது குறித்து விசாரித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது இருப்பினும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம் என்னவென்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் உடனடியாக முள்ளிப் பள்ளம் ஊராட்சியில் தொடர் மருத்துவ முகாம்களை அமைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் மருத்துவமனைக்கு செல்வதற்கான காரணம் குறித்தும் விசாரித்து உரிய தீர்வு காண வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசு துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ள நிலையில் பெரிய அளவில் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பகுதி பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777
