காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட்சியில் கிழக்கு திசையை நோக்கி அமைந்து, பல தலைமுறைகளாக கிராம மக்களுக்கும் பக்தர்களுக்கும் அருள்பாலித்து வரும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மந்தவெளி அம்மன் ஆலயத்தின் ஆடி மாத கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மிகவும் விமர்சையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.


விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று அம்மனுக்குக் காப்புக்கட்டுதலும், அதைத் தொடர்ந்து கோலாகலமான பால்குட ஊர்வலமும் நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள அருள்மிகு முருகர் ஆலயத்தில் இருந்து ஆன்மீக பக்தி முழக்கங்களுடன் புறப்பட்ட இந்த ஊர்வலத்தில், சுமார் 105-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.



ஊர்வலத்தின் முடிவில் ஸ்ரீ மந்தவெளி அம்மனுக்குச் சிறப்பான பாலாபிஷேகமும், மகா தீபாராதனை மற்றும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, ஆலயத்தின் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகத்தம்மன் ஆலயத்திலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.


திருவிழாவை முன்னிட்டு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஆடி மாதம் 24-ஆம் தேதியை முன்னிட்டு, விழாவின் சிகர நிகழ்ச்சியான கூழ்வார்த்தல் மற்றும் பக்தர்களின் நேர்த்திக்கடனுக்கான தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி / 8939476777
