கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி வனச்சரகம், ஆரல்வாய்மொழி அடுத்த செண்பகராமன்புதூர் மரப்பாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 9:30 மணியளவில், காவல்துறையில் பணிபுரியும் அசோக் என்பவரின் தாயார் வீட்டு காம்பவுண்ட் சுவருக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. அங்கு வளர்த்து வந்த வீட்டு நாயை வேட்டையாட முயன்றதும், அப்போது அப்பகுதியில் உள்ள மற்ற நாய்களின் சத்தம் கேட்டு சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. கடிபட்ட காயத்துடன் வீட்டு நாய் உயிர் பிழைத்தது.

உடனடியாக, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து தணிக்கை மேற்கொண்டனர். தற்போது 2 குழுக்களாக பிரிந்து அப்பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வனத்தின் அருகே அமைந்த பொத்தை அடிவாரம் உள்ள வீடு என்பதால் சிறுத்தை வந்திருக்கலாம். “ஏற்கனவே சிறுத்தை வந்து சென்ற பகுதி தான், ஊருக்குள் வர வாய்ப்பில்லை. மீண்டும் வனப்பகுதிக்கே சென்றுவிடும்” என வனத்துறையினர் தெரிவித்தனர்.

எனினும் முன்னெச்சரிக்கையாக அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777
