திருப்பாவை பாடிய ஆண்டாள் அருள் புரியும் கோவிலுக்குச் சொந்தமான வரலாற்றுப் புகழ் படைத்த திருமுக்குளம், புனிதம் வாய்ந்தது. ஆனால், இங்கு வாழும் மக்களின் அக்கறையின்மையால், இது சீரழிந்து கிடக்கிறது.

இக்குளத்தின் படிக்கட்டுகள் எங்கும் குப்பையும், கூளமுமாகக் கிடக்கிறது. முள் செடிகள் படர்ந்து கிடக்கின்றன.
பெரும் வரலாறு கொண்ட இந்த திருமுக்குளத்தைச் செப்பனிடவோ, தூய்மை செய்யவோ, அறநிலையத்துறை முன் வருவதில்லை. இது கண்டு வெகுண்ட நகர இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். விஸ்வ இந்து பரிஷத், பா.ஜ.க. போன்ற இயக்கங்களின் தொண்டர்கள் தாமாகவே முன் வந்து, இந்த குளத்தின் படிக்கட்டுகளை ஒவ்வொரு மாதமும், பௌர்ணமி மாதத்தில் உழவாரப்பணி செய்து சுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த மாதம் பௌர்ணமி நாளில், இந்த இயக்கங்களைச் சேர்ந்த தொண்டர்கள், மாரிச்சாமி, வழக்கறிஞரும், எழுத்தாளருமான எஸ். ரமேஷ், வேதிக்குமார், ஜெயகுமார், பா.ஜ.க. கட்சியின் பிரமுகர் பிரபாகர், சீத்தாராமன் மற்றும் நகர ரோட்டரி கிளப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சமூக சேவகருமான வேலாயுதம் மற்றும் செங்குளத்தைச் சேர்ந்த தொண்டர்கள், திருமுக்குளத்தின் கிழக்குப் படித்துறையில் மரங்கள் போல வளர்ந்திருந்த ஆமணக்குச் செடிகள், எருக்கஞ்செடிகள், முட்செடிகள், புதர்கள், மற்றும் குளத்தில் மிதந்த இறந்தோரின் துணி மணிகளை எல்லாம் எடுத்து அப்புறப்படுத்தி தூய்மை செய்தனர்.


இறுதியில், விநாயகர் கோவில் அர்ச்சகர் கோபி, குளத்திற்கு மங்கல ஆரத்தி எடுத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தூய்மைப்பணி ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் பாராட்டுதலைப் பெற்றது.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி. /. 8939476777
