கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்குட்பட்ட இரையுமன்துறை பகுதியில் பிரதான அலைதடுப்பு சுவர் நீட்டிப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.பிரதாப் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் ;
கன்னியாகுமரி மாவட்டம், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகியவை சங்கமிக்கும் இந்திய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் மூன்று பக்கங்களிலும் 71.50 கிமீ நீளமுள்ள கடலோர பகுதியைக் கொண்டுள்ளது.
மேலும், 46 இடங்களில் மீன் இறங்குதளங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் தேங்காப்பட்டணம், குளச்சல், சின்னமுட்டம், ஜேப்பியார், முட்டம் (தனியார் துறைமுகம்) ஆகிய 4 மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் 42 சிறிய மீன் இறங்குதளங்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டிய கடல் பொதுவாக ஆண்டு முழுவதும் சீற்றமாக இருக்கும். இதனால் இம்மாவட்ட மீனவர்கள் ஆண்டு முழுவதும் கடல் சீற்றத்தை எதிர்கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் மூலம் 68,300 மீனவ மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். இத்துறைமுகத்தில் சுமார் 4,800 க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் (FRP) மற்றும் 850 க்கும் மேற்பட்ட இயந்திர விசைப்படகுகள் (MFV) மூலம் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.
மீனவர்கள் ஆண்டு முழுவதும் பாதுகாப்பாக கடலுக்கு சென்று தாங்கள் பிடித்து வரும் மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கு மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (FIDF) ன் கீழ் ரூ. 116.00 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு 85% பணிகள் முடிக்கபட்டு மீதம் உள்ள பணிகள் நடைபெற்றுவருகிறது.
தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக பிரதான அலைதடுப்புச் சுவர் நீட்டிப்பு பணி (பகுதி II) நடைபெற்று வருகிறது.

மேலும் மாவட்டத்தில் கட்டுமானத்திற்கு தேவையான பெரிய கற்கள் கிடைப்பதில் சிரமம், பணி நடைபெறும் இடத்திற்கான அணுகு பாதையில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கட்டுபாடுகள் மற்றும் கற்களைக்கொண்டு செல்வதற்கான இணையவழி அனுமதிகள் மற்றும் கடல் அலைகளின் சீற்றத்தால் பழைய அலைத்தடுப்புச்சுவரில் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நடைபெறுவதில் சிரமங்கள் நிலவின. தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைவில் முடித்து, மீன்பிடித்தொழிலில் ஈடுப்படும் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு மீன்வளத்துறை துணை இயக்குநர், செயற்பொறியாளர் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.பிரதாப், ., தெரிவித்தார்கள்.
நடைபெற்ற ஆய்வில் துணை இயக்குநர்கள் கோபிநாத் (கன்னியாகுமரி), .காசிநாத பாண்டியன் (ஈரோடு), கடலரிப்பு தடுப்பு கோட்ட செயற்பொறியாளர் பிரேமலதா, கிள்ளியூர் வட்டாட்சியர் .ராஜசேகர், உதவி செயற்பொறியாளர்கள், மீனவ பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777
