ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து மஞ்சள் ஆடை அணிந்து பூக்குழி இறங்குவது வழக்கம் இந்த ஆண்டு பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நேற்று 18 ம் தேதி நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை 4:30 மணிக்கு பெரிய மாரியம்மன் க்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாக குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு பூக்குழி ஏற்பாடுகள் நடைபெற்றது. மதியம் 1:35 மணிக்கு திருவிழா சிறப்பாக துவங்கியது ஆண் பெண் பக்தர்கள் சாரை சாரையாக அணிவகுத்து நின்று பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் குழந்தைகளை சுமந்தும் பூக்குழி இறங்கினர்.

மேலும் பக்தர்கள் வாயில் அலகு குத்தி பூக்குழி இறங்கினர். பூக்குழி விழா மாலை 5.30 மணி வரை இடைவிடாமல் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அரசு துறை சார்பாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், நகரில் அனைத்து இடங்களிலும் பல்வேறு சமுதாய தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் சர்பத் பிரசாதங்கள் இடைவிடாமல் வழங்கப்பட்டது. சுமார் 15, 000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கியது குறிப்பிடத்தக்கது.

கோயில் தக்கார் சௌ.சர்க்கரை அம்மாள் கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி ஆய்வாளர் முத்து மணிகண்டன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் மண்டபத்திற்குள் மருத்துவ முகாம் இயங்கியது பூக்குழி இறங்கிய பக்தர்கள் தொடர்ந்து மாரியம்மன் திருக்கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜதுரை சங்கர் கண்ணன் மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்க்காவல் படையினர் பக்தர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

யாக குண்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு படையினர் பெரிதும் சேவை புரிந்தனர். பூக்குழி விழாவில் இன்று 19ஆம் தேதி காலை பெரிய மாரியம்மன் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் செ.மாரியப்பன் விருதுநகர் உதவி ஆணையர் மு. நாகராஜன் தக்கார் சௌ.சக்கரை அம்மாள் ஆய்வாளர் செ.முத்து மணிகண்டன் கோயில் செயல் அலுவலர் செ.ஜோதிலட்சுமி மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்திகள் : சுந்தராஜன் & சிவன்ராஜன் / எதிரொலி / 8939476777
