மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 30-க்கும் அதிகமான கிராம மக்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு விபத்தில் சிக்கியவர்கள் அதிக அளவில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதாவது 12ம் தேதி வாடிப்பட்டி அருகே சாணாம் பட்டி என்னும் இடத்தில் அதிகாலை நடந்த விபத்தில் 13ம் தேதி திருமணம் நடக்க இருந்த திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் பகுதியை சேர்ந்த மரிய வெல்சியா என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த மரிய வெனுசியா உடலை வாடிப்பட்டி அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர். இந்த நிலையில்தான் இங்குள்ள பிணவறையின் மேற்கூரை காங்கிரீட் பூச்சு திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
நல்வாய்ப்பாக ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதற்கு முதல் நாள் 11ம் தேதி தான் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் கூடுதல் கட்டிடம், உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பிணவறை மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிணவறையில் உயிரிழந்தவரின் உடல் இருந்த போது கட்டடத்தின் உள் பூச்சி பெயர்ந்து விழுந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் ஆகிய அரசு மருத்துவமனைகளின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777
