மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 58 வது வார்டு பகுதியில், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தினசரி பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ,
கொங்கு மண்டலம் மற்றும் கேரளாவிற்கு இங்கு இருந்து தான் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் புற காவல் நிலையம் அருகே, மூடிய நிலையில் கழிவறை ஒன்று இருக்கிறது. அதிலிருந்து மனித கழிவுகளுடன் கழிவு நீரானது வெளியே சாலையில் ஆறு போல ஓடுகிறது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் பலர் நேரடியாக சென்று தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும், பயணிகளும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மேலும், இந்தக் கழிவு நீர்கள் தேங்கி இருக்கும் பகுதிக்கு மிக அருகிலேயே
உணவகங்களும் உள்ளன, இந்த அசுத்த நீரில் இருக்கக்கூடிய ஈக்களும், கொசுக்களும், உணவகத்தில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் மீதும் உட்காருவதால், நோய் தொற்றுகள் வேகமாக பரவுவதற்கு காரணமாகி விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதியில் உள்ள, உணவு விடுதி உரிமையாளர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

மேலும் , புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறையை திறக்க விடாமல் ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் தடுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்த துர்நாற்றம் அடிக்கும் நிலையிலும் மாநகராட்சி உறங்குகிறது என, பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா, அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பயணிகளுக்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யுமா என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்திகள் : காளமேகம் / மதுரை / எதிரொலி / 8939476777
