சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல மருத்துவ துறையின் கீழ் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது .

இம்மையத்தில் ஆதரவற்ற மனநோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உறைவிடம், உணவு, மருத்துவ வசதிகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 28, 30, 50 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 4 – நபர்கள் கண்டறியப்பட்டு, மீட்பு மையத்தில் சேர்க்கப்பட்டனர் .

கடந்த ஒன்றரை வருடங்களாக அவர்களுக்கு தேவையான உணவு, சிகிச்சை அளித்து பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், மேற்கண்ட 4 – நபர்களும் நோயின் தீவிரத்தன்மை குறைந்த நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், மும்பையை சேர்ந்த அரசு சாரா நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டனர்.
அங்கிருந்து அவர்கள் குடும்பத்துடன் இணைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவர்களுக்கு பழக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் பொழுது நோயின் தீவிர தன்மை விரைவாக மேம்படும் என்பதாலும் இந்த ஒப்படைப்பு செய்யப்பட்டது.

இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்த அரசு சிவகங்கை மருத்துவ கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர். செல்வராஜன் அவர்களுக்கு மனநல துறையின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. முதல்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஒப்படைப்பு நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் தமிழ்வாணன் , துணை முதல்வர் விசாலாட்சி , நிலைய மருத்துவர் முகமது ரபி , துணை நிலைய மருத்துவர்கள் தென்றல் வெங்கடேஷ், மனநல துறை தலைவர்
ராஜசுந்தரி , உதவி பேராசிரியர் அனிதா பாய் மற்றும் அரசு சாரா நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு, சிவகங்கை ராணி வேலுநாச்சியார் அறக்கட்டளை நிர்வாகம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

செய்திகள் ; ஆனந்த் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *