கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகள் துறை சார்பில் களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட களியக்காவிளை பேருந்துநிலைய கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், (08.07.2026) அன்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக களியக்காவிளையை சுற்றி உள்ள பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் களியக்காவிளை பிரதான சந்திப்பில் களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சியின் சார்பில் ரூ.9.20 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பேருந்துநிலையத்தில், தரைத்தளத்தில் 4 கடைகளும், முதல்தளத்தில் 4 கடைகளும், இரண்டாம் தளத்தில் 3 கடைகள் மற்றும் உணவகமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகங்கள், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக கழிப்பறைகள், கை கழுவும் இடம், சுகாதார பொருட்கள் வைக்கும் அறை, குடிநீர் வசதிகள் என அடிப்படை வசதிகளுடன் பேருந்துநிலையம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், இப்பேருந்து நிலையத்தில் 150 க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் வந்து சென்று கொண்டிருந்தது. அதற்கு ஏற்ப கூடுதல் வசதிகளுடன் வடிவமைத்திட ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பயணிகளுடன் காய்கறி சந்தைக்கு வருபவர்களும் அதிக அளவில் பேருந்து நிலையத்திற்கு வருகை புரிகின்றனர். பணியின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை சமர்ப்பித்திட உதவி இயக்குனர் பேரூராட்சி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக பணிகளை நவம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்திட பேரூராட்சி உதவி இயக்குநர், செயற்பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பளுகல் பேரூராட்சிக்கு உட்பட்ட பளுகல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தெரிவித்தார்கள்.
நடைபெற்ற ஆய்வில் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கோமதி, களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், உதவி செயற் பொறியாளர் .சிவசங்கர், செயல் அலுவலர் சந்திரகலா, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777
