கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பாதகோட்டா ஸ்ரீ சீதா ராமஞ்சநேயஸ்வாமி திருக்கோயிலில், இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆலயம் பழமையான ஆஞ்சநேயர் கோயிலாகும். 1932-ம் ஆண்டு வைசாக சுத்த தசமி அன்று ஸ்ரீ சீதா ராம லட்சுமண விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடுகள் நடந்து வருகின்றன.

இந்த ஆண்டு பிரம்மோற்சவம் இம்மாதம் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் கடந்த 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை – அஷ்டமி திதி அன்று காலை சுவாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் மாலை, சங்கல்பம், சுவஸ்திவாசனம், அங்குரார்ப்பணம், மிருத்சங்கிரஹணம், ரக்ஷாபந்தனம் ஆகியன நடைபெற்றன.
தொடர்ந்து 25 ஆம் தேதி சனிக்கிழமை – நவமி திதியில்,
காலை துஜாரோஹணம் எனப்படும் கொடியேற்றம் நடந்தது. பின்னர், சூரிய பிரபை வாகனத்தில் காட்சி தந்த சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகளுடன், பேரிதாடனம், தீபாராதனை ஆகிய வைபவங்கள் நடைபெற்றன. பின்னர் மாலையில் ஸ்ரீ சீதாராம லக்ஷ்மண ஹனுமத் சுவாமிகள் ஹம்ச வாகனத்தில் காட்சி தந்து அருள் பாலித்தன.

பின்னர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை – தசமி திதி அன்று காலை சுவாமியின் பிராகார உற்சவத்தை அடுத்து திரு கல்யாணோற்சவம் வெகு விமர்சையாக நடந்தேறியது. இதன் பின்னர் மாலையில் சுவாமி கருட வாகன உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்சம் வைபவத்தில் அருள் பாலித்தார்.
அதேபோல 27 ஆம் தேதி திங்கட்கிழமை – ஏகாதசி திதி என்று காலையில் சுவாமி ஸ்ரீ சீதாராமர் அனுமந்த வாகன உற்சவம், தோமாலை சேவை, மண்டபாடி சேவை சாதித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனை தொடர்ந்து, இன்று நிகழ்ச்சியின் முக்கிய வைபவமாக திவ்ய ரதோற்சவம் எனப்படும் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுவாமி ஸ்ரீ சீதாராம லக்ஷ்மண அனுமத் சமேதராய் ரத்தத்தில் எழுந்தருளி திருக்காட்சி தந்ததுடன் திரு தேரோட்ட நிகழ்ச்சியும் பக்தர்களின் சங்கல்பத்துடன் உற்சாகத்துடன் நடைபெற்றன.
இதன் பின்னர் சுவாமிக்கு மகா மங்கள திவ்ய தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தூளி உற்சவத்தில் ஸ்ரீ சீதாராம ஹனுமத் சமேத லக்ஷ்மணா ஸ்வாமி அருள்காட்சி தந்து அஸ்வ வாகன உற்சவத்தில் அருள் பாலித்தார்.

இதைத்தொடர்ந்து சீதாராம பட்டாபிஷேக வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண அனுமாரை வழிபட்டனர்.
செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777
