கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு – ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி திருக்கோவிலில், பங்குனி மாத பௌர்ணமி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிரம்மாண்ட யாகங்கள் நடைபெற்றன. இந்தத் திருக்கோவிலில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ராகு – கேது தோஷ நிவர்த்திக்காக விசேஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, பங்குனி மாத பௌர்ணமி மற்றும் பூசம் நட்சத்திரம் இணைந்து வரும் நன்னாள், அன்னை பிரத்தியங்கிரா தேவிக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

இதனை முன்னிட்டு இன்று நடைபெற்ற விசேஷ வழிபாட்டில், கோவிலின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகண்ட யாகத்தில் வேள்வித் தீ வளர்க்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, தங்கள் கைகளில் மிளகாய் வத்தலை ஏந்தி, தங்களின் திருஷ்டி மற்றும் தோஷங்கள் நீங்க வேண்டி, தலையைச் சுற்றி யாக குண்டத்தில் சமர்ப்பித்தனர். யாகத்தைத் தொடர்ந்து, மூலவர் பிரத்தியங்கிரா தேவிக்கு நறுமணப் பொருட்கள் மற்றும் தீர்த்தங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இந்த வழிபாட்டில் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் நின்று அம்மனைத் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருக்கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர். வழிபாட்டின் நிறைவாக பக்தர்களுக்குத் தீர்த்தப் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி /. 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *