ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியம், நத்தம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர்மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தில் குடிநீர் , மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதைத் தொடர்ந்து, பழைய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்திற்கு மருத்துவமனை செயல்பாடுகளை உடனடியாக இடம் மாற்றுவதற்கு சுகாதார அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும், இப்பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத்தில் மருத்துவச் சேவைகளைத் தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு, நத்தம் , சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகள் , மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து , அபிராமம் பேரூராட்சி , நத்தம் ஊராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களிடம் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள பொதுமக்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், மேலும், கணக்கெடுப்பு பணிகள் எந்த அளவில் நிறைவடைந்துள்ளன என்பதை கேட்டறிந்து, பொதுமக்களின் விவரங்கள் எதுவும் விடுபடாத வகையில் கணக்கெடுப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
மேலும், கமுதி ஊராட்சி ஒன்றியம், செங்கப்படை ஊராட்சியில் செயப்பட்டு வரும் அதானி கிரீன் எனர்ஜி தமிழ்நாடு லிமிடெட் நிறுவனத்தின் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சோலார் மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள், தற்போதைய மின் உற்பத்தித் திறன், நிறுவப்பட்டுள்ள மொத்த உற்பத்தித் திறன் , மின் உற்பத்தி தொடர்பான செயல்திறன் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், சோனர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு, அதன் செயல்திறன், மின் தொகுப்பிற்கு மின்சாரம் வழங்கப்படும் முறை , அதற்கான தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்து அலுவவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து , கமுதி ஊராட்சி ஒன்றியம், செங்கப்படை கிராமத்தில் உள்ள மலட்டாறு அணைக்கட்டு மூலம் 3,500 ஹெக்டேர் பாசனப் பரப்பளவு பயன்பெற்று வரும் பகுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்போது, மழைக்காலங்களில் கிடைக்கும் நீரைத் தேக்கி வைத்து, அதன் மூலம் பாசனப் பரப்பை அதிகரிக்கும் வகையில் உரிய இடத்தில் தடுப்பணை அமைத்து நீரை சேமிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், நிர்வாக அனுமதிகளைப் பெற்று, திட்டப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு பொறியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

பின்னர், கமுதி ஊராட்சி ஒன்றியம், வல்லந்தை பகுதியில் மாம்பழ சாகுபடி செய்து வரும் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயி மன்மோகன் சிங்கின் தோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாம்பழ சாகுபடியில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் , சாகுபடி முறைகள் குறித்து விவசாயியிடம் கேட்டறிந்து, அரசின் வேளாண்மைத் திட்டங்களை முறையாகப் பயன்படுத்தி சிறப்பாக சாகுபடி செய்ய வரும் விவசாமி மன்மோகன் சிங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பாராட்டினார்.
ஆய்வின் போது, சுகாதாரம் துணை இயக்குநர் மரு.குமரகுருபரன் , கமுதி வட்டாட்சியர் அய்யாத்துரை , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி. சாலி தளபதி உள்பட பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777
