நாகர்கோவில் மாநகரின் முக்கிய நுழைவுப் பகுதியாகவும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய தடம் பகுதியாகவும் விளங்கும் ஒழுகினசேரி மேம்பாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலைப் பகுதிகளில் எழும் அதிகப்படியான தூசியால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைப் பணிகள்:
இப்பகுதியில் நிலவும் தொடர் போக்குவரத்து நெரிசல் மற்றும் அருகே நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் காரணமாக சாலையில் மண் மற்றும் துகள்கள் அதிக அளவில் தேங்கியுள்ளன. இதன் வழியாகச் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது, சாலையில் தேங்கியுள்ள பொடிமண் மற்றும் தூசிகள் காற்றுடன் கலந்து பெரிய அளவில் மேலெழும்புகின்றன.

காற்றில் பறக்கும் இந்தத் தூசிகள் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால், விபத்து அபாயம் ஏற்படுவதோடு, அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
சாலையில் வாகனங்கள் செல்லும் போதெல்லாம் எழும் புழுதிப் புயலால் இருசக்கர வாகன ஓட்டிகள் முகமூடி அல்லது கைக்குட்டைகளைக் கட்டிக்கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, ஒழுகினசேரி மேம்பாலம் மற்றும் இணைப்புச் சாலைகளில் தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றவும், சாலையில் தேங்கியுள்ள தூசியை அகற்றவும் உரிய விரைவு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் ; சுரேஷ் எதிரொலி.இன் / 8939476777
