விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியில் ஒன்று திரண்ட கைத்தறி நெசவாளர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் குறித்து முழக்கமிட்டபடி ஊர்வலமாக வந்தனர். அம்பலப்புளி பஜார், ஸ்டேட் வங்கி, தென்காசி சாலை வழியாக ஊர்வலமாக வந்த கைத்தறி நெசவாளர்கள் தெற்கு காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள சேலை ஒன்றுக்கு ரூ. 250 கூலி நிர்ணயம் செய்ய வேண்டும், வேலை இழப்பு ஏற்பட்ட 5 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும், ஓய்வூதியம் ரூ. 4,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அந்த போராட்டத்தால் தென்காசி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களை சமரசம் செய்ய முயன்ற போலீஸாருடன் பெண் நெசவாளர்கள் வேலை இழந்து இருக்கும் தங்களை, தமிழக அரசு அலட்சியப்படுத்துவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெசவாளர்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட நெசவாளர்கள் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777
