மதுரை ஆணையூர் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆணவப் படுகொலையா? அல்லது விபத்தா? என்பதை கண்டறியாமல் குற்றவாளிகளுக்கு மதுரை மாநகர காவல்துறை துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும், விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி கடந்த 10 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

“கொலையா? ஆணவப் படுகொலையா?” என்ற கேள்வியை எழுப்பி 12 நாட்களாக பிணவறையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினரின் மெத்தனப் போக்கை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் மாணவனின் மரணத்திற்கு நீதி கேட்டும், சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றக் கோரியும், CBCID விசாரணையை வலியுறுத்தியும் SFI-DYFI-AIDWA-TNUF சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்தபோது, அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed