காஞ்சிபுரத்தில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 6 பேர், அங்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்திற்குப் பின் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவும், அவர்களைப் பத்திரமாக மீட்டுத் தரக் கோரியும் அவர்களின் உறவினர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் மனு அளித்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ‘மகாதேவ் கைலாஷ்’ சுற்றுலா ஏஜென்சி மூலமாக, கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி சீனா மற்றும் நேபாளப் பகுதிகளுக்கு 49 பேர் கொண்ட குழு 15 நாள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ளது. நேற்று காலை 6 மணியளவில் சீன எல்லைப் பகுதியில் இருந்து குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட காஞ்சிபுரம் பகுதி சேர்ந்த மீனாட்சி மற்றும் சந்திரன் ஆகியோர், தாம் நேபாளம் நோக்கிச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.


அதன் பிறகு நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப் பெருக்குக்குப் பின், அவர்கள் 6 பேரின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:
மீனாட்சி (அறம் வளர்த்தீஸ்வரர் கோவில் தெரு, காஞ்சிபுரம்)
சந்திரன் (ஆட்சியர் அலுவலகப் பகுதி)
அருணாச்சலம் லதா பானுமதி (மாமல்லன் நகர்)
சரஸ்வதி (மாமல்லன் நகர்)
கோபால் (மாமல்லன் நகர்)
இன்று சுற்றுலா முடிந்து சென்னை திரும்ப வேண்டிய நிலையில், கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்ற அச்சத்தில் குடும்பத்தினர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.


உடனடியாக அவர்களைக் கண்டுபிடித்து மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி / 8939476777
