திருச்சி புத்தூர் பகுதியில் தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகத்தை திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தனது இல்லத்திலேயே அமைத்துள்ளார்.

புழங்குப் பொருட்கள் காட்சியகம் குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,

ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, வாழ்க்கை முறை, தொழில்நுட்ப அறிவு மற்றும் மரபு ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் முக்கியமான ஆதாரங்களில் ஒன்று புழங்கு பொருட்களாகும். மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய பொருட்கள் காலப்போக்கில் பயன்பாட்டிலிருந்து மறைந்தாலும், அவை வரலாற்றுச் சான்றுகளாக மாறுகின்றன. இத்தகைய பொருட்களை 1995 ஆண்டு முதல் சேகரித்து பாதுகாத்து மக்களுக்கும், மாணவர்களுக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகம் மூலம் எடுத்துரைத்து வருகிறேன்.

முன்னோர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள், வேளாண் கருவிகள், சமையல் பாத்திரங்கள், இசைக்கருவிகள், அளவைகள், தொழிற்கருவிகள், நாணயங்கள், விளக்குகள், கல்வி உபகரணங்கள் போன்ற அனைத்தும் புழங்கு பொருட்கள் எனப்படுகின்றன. இவை ஒரு காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையையும் அறிவியல் திறனையும் வெளிப்படுத்துகின்றன.
புழங்கு பொருட்கள் காட்சியகத்தின் நோக்கமானது பழமையான பொருட்களை பாதுகாத்து இளம் தலைமுறையினருக்கு மரபை அறிமுகப்படுத்தி தமிழர் பண்பாடு மற்றும் வாழ்வியலை எடுத்துரைப்பது ஆகும்.

ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதாரங்களை வழங்கி மறைந்து வரும் பாரம்பரிய அறிவை பதிவுசெய்து வருகிறோம். வரலாற்று ஆய்வுக்கு ஆதாரம்
கல்வெட்டுகள், செப்பேடுகள் போலவே புழங்கு பொருட்களும் வரலாற்றுத் தகவல்களை வழங்குகின்றன. ஒரு காலகட்ட மக்களின் உணவு, உடை, தொழில், பொருளாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்ய உதவுகின்றன.

வாழ்வியல் ஆய்வுக்கு முன்னோர்கள் எவ்வாறு வாழ்ந்தனர், எந்த வகையான உணவுப் பழக்கங்களை பின்பற்றினர், எந்த கருவிகளை பயன்படுத்தினர் என்பதைக் கண்டறிய உதவுகின்றன. இன்றைய நவீன கருவிகளின் முன்னோடிகளாக இருந்த கருவிகளை ஆய்வு செய்து தொழில்நுட்ப வளர்ச்சியின் பரிணாமத்தை அறிய முடிகிறது.நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் மற்றும் கைவினை மரபுகள் குறித்து அறிய காட்சியகப் பொருட்கள் முக்கிய ஆதாரங்களாக அமைகின்றன. பழைய நாணயங்கள், அளவைகள், வணிக உபகரணங்கள் போன்றவை அக்கால நிலையை விளக்குகின்றன.

வேளாண் கருவிகள் கலப்பை, மண்வெட்டி, ஏர்,குதிர், தானிய சேமிப்பு பொருட்கள்,சமையல் பொருட்கள், அம்மி, ஆட்டுக்கல், உரல், உலக்கை,
செம்புப் பாத்திரங்கள், அளவைகள், நாழி, உழக்கு,மரக்கால்,படி,
இசைக்கருவிகளில் பறை, உடுக்கை,
விளக்குகளில் குத்துவிளக்கு,
அகல்விளக்கு, தூக்கு விளக்கு என பல்வேறு பொருட்கள்
மாணவர்களுக்கு நேரடி கற்றல் அனுபவத்தை வழங்குகிறது.

புத்தகத்தில் படித்தவற்றை நேரில் காண முடிகிறது. வரலாற்றின் மீது ஆர்வம் உருவாகிறது. ஆய்வுத் திறன் வளர்கிறது. பண்பாட்டு விழிப்புணர்வு ஏற்படுகிறது.மரபு பாதுகாப்பின் அவசியம் புரிகிறது. தமிழர் நாகரிகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. இந்நாகரிகத்தின் அடையாளங்களாக விளங்கும் பொருட்களை பாதுகாக்கும் பணியை புழங்கு பொருட்கள் காட்சியகங்கள் மேற்கொள்கின்றன. இவை வெறும் பொருட்களின் சேகரிப்பு அல்ல; தமிழர் வாழ்வியலின் உயிருள்ள ஆவணங்களாக திகழ்கின்றன.

புழங்கு பொருட்கள் காட்சியகம் பழைய பொருட்களின் குவியல் அல்ல. அது ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை முறையை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் அறிவுக் களஞ்சியமாகும். ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் இத்தகைய காட்சியகங்கள் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும். தமிழர் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் பணியில் புழங்கு பொருட்கள் காட்சியகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

அவை நம் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலங்களாக விளங்குகின்றன என்றார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்குகளுக்கு சென்று மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் குறித்து தெரிந்து கொண்டும் வழக்கொழிந்த பொருட்கள் இருப்பின் அதை சேகரித்தும் வருகிறார்.

மேலும், இல்லத்தில் பயன்பாடு இல்லாமல் வழக்கொழிந்த புழங்கு பொருட்கள் இருப்பவர்கள் கொடையாக வழங்குபவர்கள் வழங்கலாம் என்றார்.

தொடர்புக்கு : 9842412247

செய்திகள் ; விஜயகுமார் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed