​காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு திருவீதி பள்ளம் பகுதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உரம் தயாரிக்கும் வளாக சாலையில், ₹55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் சுவர், கட்டப்பட்ட மூன்றே நாட்களில் சுமார் 500 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​திட்ட விவரங்கள்:

மாநகராட்சி வார்டு 22-ல் 744 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் மற்றும் மதகு அமைக்கும் பணிக்கு (Storm Water Drain and R.C.C Culvert with Cover Slab) ஜி.எஸ்.டி உட்பட ₹55 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணியை ‘விடிஎன் கன்ஸ்ட்ரக்ஷன்’ உரிமையாளர் துவாரகேஷ் என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார்.

​விதிகளை மீறிய தரம் குறைந்த கட்டுமானம்:

அரசு விதிமுறைகளின்படி வடிகால் சுவருக்கு 1:2:4 விகிதத்திலான கான்கிரீட் கலவை (385.996 M3), 20 மி.மீ HBG ஜல்லி மற்றும் 900 கிலோ இரும்பு கம்பிகள் (Fe 415 TMT Rods) பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், கள நிலவரப்படி:

​உரிய முறையில் தரை ஜல்லி போடப்படவில்லை.
​தரம் குறைந்த எம்-சாண்ட் (M-Sand) மற்றும் வரையறைக்கு மாறான பெரிய ஜல்லிக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
​சுவர்களுக்குப் போதிய இரும்பு கம்பிகளோ, பலமான அடித்தளமோ அமைக்கப்படாமல் அவசர அவசரமாக பணிகள் நடந்துள்ளன.
​இதன் காரணமாகவே, கட்டப்பட்ட 3 நாட்களிலேயே 500 அடி நீளமுள்ள சுவர் சரிந்து விழுந்துள்ளது.

​அவலங்களை மறைக்க முட்புதர்கள்:

இடிந்து விழுந்த சுவர்களை கிரேன் மூலம் அவசர அவசரமாக அப்புறப்படுத்திய ஒப்பந்ததாரர், அதை முட்களைப் போட்டு மறைத்து வைத்த அவலமும் நடந்துள்ளது.

​இதனிடையே, இத்திட்டம் தொடர்பான அரசு ஆவணங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஷயம் பூதாகரமானதைத் தொடர்ந்து, இன்று ஒப்பந்ததாரர் துவாரகேஷ் அவசர அவசரமாக இடிந்த இடங்களில் மிகவும் மெலிதான இரும்பு கம்பிகளை வைத்து மீண்டும் கட்டுமானம் செய்யத் தொடங்கியுள்ளார்.

​சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகள்:

​சட்ட நடவடிக்கை: வரிப்பணத்தைச் வீணடித்து தரமற்ற முறையில் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர் துவாரகேஷ் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
​கருப்புப் பட்டியலில் சேர்க்கை: இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் (Blacklist) சேர்க்க வேண்டும்.

நஷ்ட ஈடு: இடிபாடால் ஏற்பட்ட நிதி இழப்பை ஒப்பந்ததாரரிடமிருந்தே முழுமையாக வசூலிக்க வேண்டும்.
​இதர பணிகளில் ஆய்வு: ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் வெங்காடு பகுதியில் ₹4 கோடி மதிப்பிலும், பிள்ளைப்பாக்கம் பகுதியில் ₹1.90 கோடி மதிப்பிலும் இதே ‘விடிஎன் கன்ஸ்ட்ரக்ஷன்’ மேற்கொண்ட பணிகளையும் அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
​மாநகராட்சி அதிகாரிகளின் நேரடி மேற்பார்வை இல்லாததே இந்த முறைகேட்டிற்கு முக்கியக் காரணம் என்பதால், மாவட்ட நிர்வாகம் இதில் நேரடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed