சட்டப்பணிகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை., டெல்லி தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு (NALSA) மற்றும் சென்னை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு (TNSLSA) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படியும், கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி. ஆர். லதா அவர்களின் உத்தரவின் பேரிலும், கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், போச்சம்பள்ளி தாலுகா, மடத்தானூர் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான எம். பத்மநாபன் தலைமையிலான ‘ஒன் ஸ்டாப் கிரைசிஸ்’ (One Stop Crisis) குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டனர். அப்போது, மாடத்தானூர் கிராமத்தில் உள்ள ‘எம்.எஸ்.டி பிரிக்ஸ்’ (MST Bricks) செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட மொத்தம் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த மீட்பு நடவடிக்கையில் கிருஷ்ணகிரி தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சங்கர், போச்சம்பள்ளி வட்டாட்சியர் தமோகன், தொழிலாளர் நல ஆய்வாளர் சாந்தி, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் திவ்யா, ஆதிபூமி நல அறக்கட்டளை குழுவினர் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணியாளர்கள், சட்ட விழிப்புணர்வு தன்னார்வலர்கள் (PLV) ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.
மீட்கப்பட்ட கொத்தடிமைகள் அனைவரும், தொழிலாளர் நலத்துறையினரால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரின் முன்னிலையில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் (RDO) திரு. ஷாஜகான் அவர்களிடம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக ‘விடுவிப்புச் சான்றிதழ்’ (Release Certificate) வழங்கப்பட்டது. பின்னர், அவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
