ராமநாதபுரம் மாவட்டம் , முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், உலையூர் ஊராட்சி, நெடியமாணிக்கம் சிறுபாசனக் கண்மாய்கள் தூர்வாரும் பணியினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார் .
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் ஐடௌவில்யூசிஎல்பி திட்டத்தின் கீழ், துவக்கம் என்ஜிஓ சார்பில் நெடியமாணிக்கம், செம்பொன்குடி , சுவாதன் ஆகிய கிராமங்களில் சிறுபாசனக் கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகள் மூலம் கண்மாய்களின் நீர்தேக்கத் திறன் மேம்படுத்தப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், சுமார் 200 ஏக்கர் பாசனப் பரப்பிற்கு நீர்ப்பாசன வசதி மேம்படுவதற்கும் வாய்ப்புள்ளது, விவசாயம் , கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகுக்கும். பின்னர் , அப்பகுதி பொதுமக்கள் சாலை , பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் , அவற்றின் அவசியம் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து , விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பார்த்திபனூர் மதகணையில் இருந்து பிரியும் வலது பிரதான கால்வாயின் நெடுகை 10,152 மீட்டர் பகுதியில் அமைந்துள்ள சுந்தனேந்தல் , தெளிச்சாத்தநல்லூர் கண்மாய்களுக்கு நீர் வழங்கும் தலைமதகுகள் சேதமடைந்துள்ளதால், பாசனத்திற்கு சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் மனு அளித்திருந்ததையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது , தெளிச்சாத்தநல்லூர் கண்மாய்க்கு நீர் செல்லும் வரத்துக்கால்வாய் , தலைமதகின் தற்போதைய நிலையை பார்வையிட்டு, விவசாயிகளின் பிரதான கோரிக்கைக்கு முன்னுரிமை அளித்து, அப்பணியை நீர்வளத்துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், சுந்தனேந்தல் கண்மாய்க்கு நீர் வழங்கும் தலைமதகையும் முழுமையாக சீரமைத்து, பணிகளை விரைவாக நிறைவு செய்து, வரவிருக்கும் பாசன காலத்திற்கு முன்பாக விவசாமிகளுக்கு தடையின்றி நீர் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது , செயற்பொறியாளர்
நீள்முடியோன் , உதவி செயற்பொறியாளர் சந்திரமோகன் , உதவி பொறியாளர்கள் கபிலபிரியா , கலாராணி , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
