100 நாள் வேலைத்திட்டத்தில், ஒன்றிய அரசு அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய, மாற்றுத்திறனாளிகளை தகாத வார்த்தைகளால் பேசி, சமூக விரோதிகள் போல் இழுத்துச் சென்று கைது செய்த துணை காவல் கண்காணிப்பாளர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.


போராட்ட பின்னணி:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்ததை கண்டித்து, ஜூலை 1-ம் தேதி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தியாகதுருகம் சம்பவம்:
அதன் ஒரு பகுதியாக தியாகதுருகத்தில் மாவட்ட தலைவர் என்.வைத்தியலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை காவல் கண்காணிப்பாளர் செல்வம், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் என்றும் பாராமல், ஈவு இரக்கமின்றி தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், சமூக விரோதிகள் போல் இழுத்துச் சென்று கைது செய்தது மட்டுமல்லாமல் வைத்தியலிங்கம் அழைத்து வரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பேன் என மாற்றுத்திறனாளிகளை பயமுறுத்தி மிரட்டி பேசியுள்ள குற்றச்சாட்டு.

எஸ்.பி.யிடம் புகார்:
இந்த சம்பவத்தை கண்டித்து, டிஎஸ்பி செல்வம் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி, இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், TARATDAC மாநில துணை செயலாளர் எம்.கே.பழனி, மாவட்ட தலைவர் என்.வைத்தியலிங்கம், மாவட்ட செயலாளர் பி.வேலு, பொருளாளர் எஸ்.மீனாட்சி, துணைச் செயலாளர் கே.சுதா, கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கொளஞ்சி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

“அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமையான போராட்டத்தை முன்னெடுத்த மாற்றுத்திறனாளிகளை குற்றவாளிகளை போல் நடத்தியது மனித உரிமை மீறல். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
செய்திகள் ; சசி / எதிரொலி / 8939476777
