மதுரையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை சுமார் ஆறு மணி அளவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சோழவந்தான் மற்றும் குருவித்துறை ஆகிய பகுதிகளில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். சோழவந்தானில் காலை 9.30க்கும் அதற்கு முன்னதாக குருவித்துறையில் காலை 8:30 மணிக்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசனம் செய்து சென்றனர்.

எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் திட்டமிடாத செயலால் வைகை ஆற்றில் தண்ணீர் இன்றி வறண்ட பகுதியில் கள்ளழகர் இறங்கியது பக்தர்களிடம் மன வேதனை ஏற்படுத்தியது.

குறிப்பாக மதுரையில் கள்ளழகர் இறங்கும் நாளுக்கு முன்னதாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் எனக் காரணம் கூறி குறைந்த அளவு தண்ணீரை வைகை அணையில் இருந்து திறக்க அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் ஆனது மதுரை சென்று சேர்வதற்கு முன் வெப்பம் அதிகம் உள்ள சூழ்நிலையில் நிலத்தில் உறிஞ்சப்பட்டு மதுரையில் அழகர் இறங்கும் போது தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என கருதி மாற்று ஏற்பாடாக அணைப்பட்டியில் இருந்து பாசன கால்வாய் மூலம் அலங்காநல்லூர் வழியாக செல்லூர் கண்மாய் பகுதிக்கு வைகை அணை தண்ணீரை கொண்டு சென்ற அதிகாரிகள் அங்கிருந்து மதுரையில் கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு நேரடியாக தண்ணீரை கொண்டு சென்று நிரப்பினர்.

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் தகவல் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், குருவித்துறை உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து குருவித்துறை சோழவந்தான் வழியாக தண்ணீரை மதுரைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதில் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் குருவித்துறையில் தண்ணீர் இன்றி வெறிச்சோடிய வைகை ஆற்றிலும் சோழவந்தானிலும் தண்ணீர் இன்றி வைகை ஆற்றிலும் கள்ளழகர் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது இது சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து கள்ளழகரை தரிசிக்க வருகை தந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மனதில் வேதனையை ஏற்படுத்தியது.

கள்ளழகர் இறங்கும் போது வைகை ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் இருக்கும் என நினைத்த பக்தர்கள் தன்னீரின்றி காய்ந்து கிடந்ததால் அழகர் மீது தண்ணீரை பீச்சு அடிக்கவோ வெப்பத்தை தணிக்க வைகை ஆற்றில் குளித்து மகிழவோ முடியாத நிலையில் பக்தர்கள் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர் நேற்று காலை ஆறு முப்பது மணி அளவில் மதுரையில் கள்ளழகர் இறங்கியவுடன் அதிகாரிகள் சுதாரித்து அணைப்பட்டியில் இருந்து குருவித்துறை வழியாக தண்ணீரை திருப்பி விட்டிருந்தால் கூட ஒரு மணி நேரத்தில் 8 கிலோமீட்டர் தூரம் உள்ள குருவித்துறைக்கும் 15 கிலோமீட்டர் தூரம் உள்ள சோழவந்தானிற்க்கும்
குறைந்த அளவு தண்ணீராவது வந்து சேர்ந்திருக்கும் இதனையும் செய்ய எந்த ஒரு முயற்சியும் அதிகாரிகள் தரப்பில் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்த திட்டத்தை மாற்றி அதிகாரிகள் தன்னிச்சையாக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை மதுரைக்கு நேரடியாக கொண்டு சென்றதன் விளைவாக பக்தர்கள் பொதுமக்கள் கள்ளழகரை தரிசிப்பதில் கடும் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டனர். இனிவரும் காலங்களிலாவது முன்கூட்டியே திட்டமிட்டு குருவித்துறை மற்றும் சோழவந்தான் பகுதிகளுக்கும் வைகை ஆற்றில் போதிய அளவுதண்ணீர் இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed