திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜாரில் பொன்னேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாகவும், கற்றறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளதாக கூறினார்.

காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும், தமிழ்நாட்டின் காலை உணவு திட்டம் கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தெலுங்கானாவிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.

அனைத்து துறைகளிலும் சிறந்த நிர்வாகி என்ற பெயரை முதல்வர் எடுத்துள்ளதாக கூறினார். ஒரு போதும் மத்திய அரசுக்கு அடிபணியாதவர் முதல்வர் எனவும், தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் கூறியதை நினைவு கூர்ந்தார். தமிழ்நாட்டுக்குள் மோடி நேரடியாக நுழைய முடியாது என்பதால், மறைமுகமாக முகமூடி அணிந்து கொண்டு போர்வை போர்த்தி நுழைய எடப்பாடி அடி பணிந்து அடிமை சாசனம் எழுதி கொடுத்தி விட்டார் எனவும், ஜெயலலிதா இருந்தவரை நீட், உதய் மின் திட்டம் வரவில்லை எனவும்,

மோடி காலில் ஆட்சியை வைத்து, தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி எனவும் அவர் விமர்சித்தார். ஒன்றிய அரசு 2800 கோடியை கொடுக்காமல் போனாலும், 10ஆயிரம் கோடி கொடுத்தாலும், குலத்தொழிலை புகுத்தும் புதிய கல்வி கொள்கையை ஏற்று கொள்ளாதவர் ஸ்டாலின் எனவும் அவர் தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தின் போர்வையில் பாஜக போட்டியிடுகிறது என்றார். பிஜேபியின் கிளை கழகம் அதிமுக எனவும், அதிமுகவை எடப்பாடி அடகு வைத்து விட்டார் எனவும், சிலிண்டர் விலையை கண்டித்து நாடே போராடிய போதும், எடப்பாடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என சாடினார்.

எடப்பாடி பழனிசாமி, தினகரன், அன்புமணி உள்ளிட்டோர் வழக்குகளுக்கு பயந்து பாஜக கூட்டணியில் உள்ளதாகவும், ஆயிரம் மோடிகள் வந்தாலும் எதிர்த்து நிற்பவர்கள் தங்களது கூட்டணியில் உள்ளவர்கள் எனவும் அவர் கூறினார்.
செய்திகள் : லோகநாதன் எதிரொலி / 8939476777
