சேலம் மாவட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நீண்டகாலமாக ஓமலூர் தாலுகா நிர்வாகத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஓமலூர் தாலுகாவை இரண்டாக பிரித்து புதியதாக காடையாம்பட்டி தாலுகாவை கொண்டுவந்தனர். அப்போது தாத்தியம்பட்டி கிராமம் மிக தொலைவில் உள்ள காடையாம்பட்டி தாலுகா நிர்வாகத்தின் கீழ் சென்று விட்டது.

இதனால் நாள்தோறும் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், மீண்டும் அருகே உள்ள ஓமலூர் தாலுகாவிற்கு மாற்ற வேண்டும் என போராடி வந்தனர். அதேபோல் தாத்தியம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனவும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாத காரணத்தால் நடைபெற உள்ள 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக ஊரின் நுழைவுப் பகுதியில் கிராம மக்கள் ஒன்று திரண்டு தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போராட்டத்திற்கு தாத்தியம்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், பாரதிய குடியரசு கட்சி தலைவருமான கே.கருமலை தலைமை தாங்கினார். இதில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
சேலம் செய்தியாளர்
கா.தங்கதுரை 9442979467 / எதிரொலி / 8939476777
