மூன்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் மஞ்சள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தாத வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கண்டனம்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் சம்பா நெல் அறுவடைக்கு பின்பான உளுந்து பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் உளுந்து பயிர் பசுமையாக வளர்ந்துள்ளதை கண்டு விவசாயிகள் நல்ல விளைச்சல், நல்ல லாபம் கிடைக்கும் என்று நினைத்திருந்த நிலையில், அவர்களது நினைப்பில் இடி விழுந்த கதையாக தற்போது உளுந்து பயிரில் முழுமையாகவே மஞ்சள் நோய்த்தாக்குதல் அதிகரித்து உள்ளது அதன் காரணமாக உளுந்து பயிர் செடிகள் முழுமையாகவே மஞ்சள் நிறமாக மாறிவிட்டன.

இது ஒவ்வொரு செடியாக மாறிக்கொண்டே வயல் முழுவதும் பரவிக் கொண்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த மஞ்சள் நோய் தாக்குதல் இப்பகுதி விவசாயிகளை பாடாய்ப்படுத்தி மகசூல் இழப்பு பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. மஞ்சள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகளை தெளித்து பார்த்தும் பலன் இல்லை. மேலும் இதுகுறித்து வேளாண்மை துறையிடம் தெரிவித்த நிலையிலும் எங்களுக்கு அது என்ன காரணம் என்று தெரியவில்லை என அவர்கள் கையை விரிப்பதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் பாதிப்பு தொடர்வது குறித்து விரிவான ஆராய்ச்சி மற்றும் அதற்கான தீர்வு கண்டுபிடித்திருந்தால் இந்த மஞ்சள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி இருக்கலாம், அல்லது வராமலே தடுத்திருக்கலாம். ஆனால் வேளாண்மை துறை விவசாயிகளை கைவிட்டு விட்டதாகவே குறிப்பிடுகின்றனர்.

தங்களது உளுந்து பயிர்களை ஆய்வு செய்து மஞ்சள் நோய் தாக்குதலுக்கான கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள், மேலும் இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பிற்கான நிவாரண உதவிகள் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
எதிரொலி / 8939476777
