ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் நெடுஞ்சாலைத்துறை (தேசிய நெடுஞ்சாலை) மூலம் முதுகுளத்தூரில் இரண்டாம் கட்ட பணிக்கான புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
விழாவிற்கு , தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையேற்று முதுகுளத்தூர் நகர் பகுதியில் புறவழிச்சாலை இரண்டாம் கட்ட பணியினை துவக்கி வைத்து தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க முதுகுளத்தூர் பகுதியில் புறவழிச்சாலைக்கான இரண்டாம் கட்ட பணி ரூ.43.56 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 2.28 கிலோமீட்டர் ஆகும். இதன் மூலம் கமுதியிலிருந்து நகர் பகுதிக்குள் வராமல் புறவழிச்சாலையாக முதுகுளத்தூர் வழியாக சாயல்குடி சென்றடையும் சாலையில் இணைய உள்ளது.
மாநில நெடுஞ்சாலையின் மூலம் தஞ்சாவூர் முதல் சாயல்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் பணி அமைவதன் மூலம் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு இடையூறு இன்றி குறித்த நேரத்தில் பயணங்கள் மேற்கொள்வதற்கு புறவழிச்சாலை திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஐந்து ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி பொருளாதார முன்னேற்றம் கண்ட மாவட்டமாக திகழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணி விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளது.
அதேபோல் , விவசாய பணிக்கு ஏதுவாக மலட்டாறு, வைகை பாசன கால்வாய் உள்ளிட்ட நீர்நிலை ஆதாரங்களை சீர் செய்து விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் பாசனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை உணர்ந்து ஒவ்வொரு திட்டத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள் என தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எளப்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணான் நெடுஞ்சாலைத்துறை (தேசிய நெடுஞ்சாலை) செயற்பொறியாளர் செந்தில்குமார் , உதவி செயற்பொறியாளர் பாண்டியன் , முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோபிநாத், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777
