இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் மாவட்ட காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த மாபெரும் விழிப்புணர்வு விழா திருவாடானை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் டிஎஸ்பி சீனிவாசன் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். முன்னதாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் சுரேஷ்குமார் வரவேற்று வரவேற்புரையாற்றினார். அதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களை பற்றி துணை ஆட்சியர் செல்வி மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் செலினா, மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் சபரிநாதன் மனித உரிமைகள் பற்றிய சட்ட விழிப்புணர்வு உரையினை மிகத் தெளிவாகவும், விரிவாகவும் எடுத்துரைத்தார். மேலும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கல்லூரியின் முதல்வர் முனைவர் பழனியப்பன் தலைமையில் கல்லூரி மாணவ மாணவிகள் மூலமாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நாட்டு புறகலை பயிற்றுனர் வைகை கோமதி செய்திருந்தார். கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மூலமாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ரபீக், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் துறை ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை சுந்தரமூர்த்தி தொகுத்து வழங்கினார்.

செய்திகள் : கோட்டைச்சாமி எதிரொலி / 8939476778
