மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி தட்டானூர் சீனிவாசா காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். அவர் ஆட்டோ ஓட்டி வருகிறார், அவருக்கு திருமணமாகி ஷாலினி (32) என்ற மனைவியும், மோகனஸ்ரீ (6), விஜயஸ்ரீ (4) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், தன் கணவரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது, இதை அறிந்த ஷாலினி தன் கணவனை கண்டித்துள்ளார். இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவும் வழக்கம் போல் கணவன்- மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் மகேஸ்வரன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
அதனால் ஆத்திரமடைந்த ஷாலினி தன் இரண்டு குழந்தைகளுக்கும் எலி மருந்தை கொடுத்துவிட்டு, தானும் அதை குடித்து தற்கொலைக்கு முயன்றார். தான் விஷம் குடித்து தகவலை தன் கணவரிடம் போனில் சொல்லியுள்ளார்.
உடனே, பதறி போய் வீட்டிற்கு வந்த மகேஸ்வரன் எலி பேஸ்ட் குடித்து உயிருக்கு போராடிய தன் மனைவி, மகள்களை மீட்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகனஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஷாலினி, அவரது இளைய மகள் விஜயஸ்ரீ ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப பிரச்சனையில் தன் குழந்தைகளுக்கு எலி மருந்தை கொடுத்து தானும் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செய்தியாளர் : காளமேகம் / எதிரொலி / 8939476777
