ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 603 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் , வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்ததாவது :
ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
முன்னதாக , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மாவட்ட வளர்ச்சி கூட்டரங்கில், கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களின் நிலை தொடர்பாகவும், மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டு கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1,01,800/- வீதம் ரூ.2,03,600/- மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட சிறப்பு பெட்ரோல் வாகனங்களை வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி , ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
