வெற்றித் தமிழர் பேரவை திருச்சி மாவட்டம் சார்பில்
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளதை தொடர்ந்து பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
இந்தியாவின் மிக உயா்ந்த இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீடம், பிரபல கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான ஆா்.வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக இலக்கியவாதி ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. இலக்கியம், படைப்பாற்றல், கவிதைக்கு அவா் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் போற்றும் வகையில் பாரதிய ஞானபீடம் அமைப்பானது, 2025-ஆம் ஆண்டுக்கான அதன் 60-ஆவது ஞானபீட விருதை அறிவித்துள்ளது.
தமிழ் இலக்கியம், படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான கவிதை வெளிப்பாடு ஆகியவற்றுக்கு அவா் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்படுகிறது.

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளா்ச்சிக்கு கவிப்பேரரசு வைரமுத்து
ஆற்றிய பங்களிப்பு பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கவிதைத் தொகுப்புகள் மற்றும் நாவல்கள் உள்பட 37-க்கும் மேற்பட்ட நூல்களை இவா் எழுதியுள்ளாா். நாற்பது ஆண்டுகாலப் படைப்புலகப் பயணத்தில், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறையும், தமிழக அரசு விருதை 6 முறையும் பத்ம பூஷண் (2014), பத்மஸ்ரீ (2003) ஆகிய விருதுகளையும், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ எனும் நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதையும் (2003), கலைத் துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காகத் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளாா்.

தற்போது இந்தியாவின் மிக உயா்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வெற்றித் தமிழர் பேரவை திருச்சி மாவட்டம் சார்பில் பாராட்டு விழா திருச்சி மாவட்டத் தலைவர் பாஸ்கர், செயலர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது. கவிப்பேரரசு வைரமுத்துக்கு திருச்சி மாவட்ட வெற்றி தமிழர் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொன்னாடை, கிரீடம்,மலர் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினர்.

கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரையில்,
ஞானபீடம் விருதை பெற்றதன் வாயிலாக தமிழகத்துக்கும், தமிழா்களுக்கும் பெருமை கிடைத்துள்ளது என்றார்.
அதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்யும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்ற மனிதநேய பணிக்கு தனிநபர் பிரிவில் தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்றதை கவிப்பேரரசு வைரமுத்து பாராட்டினார்.

கவிஞரிடம் பாராட்டு பெற்ற விஜயகுமார் கூறுகையில்,
காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு உற்றார், உறவின்றி பெயர், விலாசம் தெரியாமல் இறப்போர் பலர். அவர்கள் பெயர் விலாசம் தெரியாதவராக சரக காவல்துறையினர் தரும் தகவலின் அடிப்படையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வருகிறோம்.
மேலும் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கலைகளை பரப்பவும், பாதுகாக்கவும் அறிவார்ந்த சமூகத்திற்கு இலவச நூலகம் வைத்துள்ளோம். தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும். தமிழில் எத்தனையோ அரிய நூல்களைப் பாதுகாக்க இயலாமல் இழந்திருக்கிறோம் அந்த இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது. அதை உணர்ந்தே என் காலத்தில் நூல்களைக் காப்பதற்கென்றே தனி கவனம் எடுத்துக்கொண்டேன். அவ்வாறு புத்தகத்தை காப்பதன் மூலம் தமிழ் மொழியையும் அதில் உள்ள செறிவான சிந்தனைகளையும் எதிர்காலத் தமிழர்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற இலக்குடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியத்தைக் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், 26 முறை குருதி கொடை, மூன்று ஜோடி கண் தானத்தை பெற்றுக் கொடுத்த பணி, வாழ் நாளிற்குப் பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம் என திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் மருத்துவ கல்லூரியில் உடல் தானத்திற்கு பதிவு செய்தமையையும், உடல்நலம், கவிதை, கட்டுரை நூல்கள் வெளியிட்டமையையும் எடுத்துரைத்தார்.

வெற்றித் தமிழர் பேரவை திருச்சி மாவட்டத்தலைவர் பாஸ்கர், செயலர் சந்திரன், ஒருங்கிணைப்பாளர் குபேந்திரன், நெறியாளர் முத்தமிழ்செல்வன், பொருளாளர் இஸ்தியாக் அகமது, துணைத் தலைவர்கள் ஜெரால்ட் இக்னேஷியஸ்,செல்வராஜ், முனைவர் சங்கர், ஆதி சரவணன், பேராசிரியர் சாம்பசிவம், துணைச்செயலாளர் கோபால், முகமது ஷபி, சிவசக்தி பாண்டியன், செண்பகத் தமிழ் அரங்கு நிறுவனர் தமிழ் செம்மல் இளங்கோவன், முனைவர் லாவண்யா உட்பட வெற்றி தமிழர் பேரவை நிர்வாகிகள் மற்றும்
உறுப்பினர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed