தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 68-வது ஆண்டு விழா 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளியப்பா கலை அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பெங்களூருவைச் சேர்ந்த சி எம் என் விரோசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.ஜேக்கப் கிராஸ்டா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லூரியின் துணை முதல்வர் பி.முனுசாமி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.கனகராஜ் தனது ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில் தலைமை விருந்தினர் டாக்டர் எம்.ஜேக்கப் கிராஸ்டா கல்லூரியின் சாதனைகளை பாராட்டினார். மேலும் மாணவர்கள் மாறி வரும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு தங்கள் துறைகளில் சாதிக்க பல்வேறு அறிவுரைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
கல்லூரியின் தலைவர் சொ. வள்ளியப்பா தனது தலைமை உரையில், மாணவர்கள் சவால்களை சாதனைகளாக மாற்றி உயர வேண்டும் என ஊக்கமளித்தார். கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா ஆகியோர், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.
கல்லூரி இயக்குனர் டாக்டர் வி.கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார்.
தொழில் நிறுவனங்களில் சிறந்து விளங்கும் இக்கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கல்வியில் முன்னிலை பெற்ற மாணவ, மாணவியருக்கும், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கும் துறைவாரியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.