தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு இயங்கி வருகிறது. மூன்று குடோன்களில் சுமார் 3,500 டன் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த கிடங்கில் இருந்து நாள்தோறும் 10லாரிகளில் நியாயவிலை கடைகளுக்கும், 2 லாரிகளில் சத்துணவு கூடங்களுக்கும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கிடங்கில் பணியாற்றி வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிச்சந்தையில் மூட்டை ஒன்றிற்கு 20 ரூபாய் வரை கூலி வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு கிடங்கில் பணியாற்றி வரும் தங்களுக்கு மூட்டை ஒன்றுக்கு 2ரூபாய்க்கும் குறைவாகவே கூலி வழங்கப்படுவதாகவும், தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப கூலி உயர்வை வழங்கிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.


சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சிவப்பு அட்டை வைத்துள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை விட அதிக சலுகைகள் வழங்கக்கூடிய பச்சை அட்டையை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். சங்கத் தேர்தலை உடனே நடத்திட வேண்டும், வருகை பதிவேட்டில் அனைவரது பெயர்களையும் ஏற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.


தமிழ்நாடு அரசு உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் பணியாற்றி வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நியாய விலை கடை, சத்துணவு கூடங்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
செய்திகள் ; அருள் / எதிரொலி / 8939476777

