திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி, இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் கமலக்கண்ணன், வரலாற்று ஆர்வலர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் வரலாற்றை தேடி ஒரு அடி நிகழ்விற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் செல்லப்பா நகர் காமராஜர் தெருவில் அமைந்துள்ள பொம்மை காதலன்’ அருங்காட்சியகத்திற்கு இருசக்கர வாகன பயணமாக சென்று பார்வையிட்டனர்.

பொம்மை காதலன் அருங்காட்சியக நிறுவனர் ஜி.ஆர்.மகாதேவன் அருங்காட்சியகம் குறித்து பேசுகையில்; மனதிற்கு நிம்மதி தரும் சேகரிப்பு கலையில் ஈடுபட்டு வருகிறேன். எனது சேகரிப்பை பார்வையிட்ட நல்லி குப்புசாமி மற்றும் ‘தினமலர்’ அந்துமணி ஆகியோர், அருங்காட்சியகம் அமைக்க‌ ஊக்கப்படுத்தினர். அவர்களின் ஊக்கத்தால் முதன்முதலாக, 2023ல், கொடைக்கானலில், ‘விண்டேஜ்’ அருங்காட்சியகம் அமைத்தேன். இதைத் தொடர்ந்து, 2024 ஆண்டு வீட்டின் அருகில் பொம்மை காதலன் அருங்காட்சியகத்தை அமைத்தேன்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் அபாஷ்குமாா்
அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில், ஜி.ஆா். மகாதேவன், பிரிதா்ஷினி தம்பதியராக நாங்கள் பல்வேறு இடங்களிலுமிருந்து சேகரித்த சுமார் 80 ஆண்டுகள் பழைமையான பொருள்கள் காட்சிப்படுத்தியுள்ளோம். இந்தியா, மற்றும் வெளிநாட்டு கார்கள், அக்காலத்தில் பயன்படுத்திய சாரட் வண்டிகள், கை ரிக்க்ஷா வண்டிகள், பொம்மைகள், மண் பாண்டங்கள், பியானோ உட்பட பல்வேறு இசைக்கருவிகள், டின் டாய்ஸ்’ பொம்மைகள், உலக நாடுகளின் பணத்தாள்கள், பேருந்து பயண சீட்டுகள், அஞ்சல் தலைகள், விண்டேஜ் கார்கள், இருசக்கர மோட்டார் வாகனங்கள், ராணுவ வீரர்களின் பதக்கங்கள், தலைவர்களின் பதக்கங்கள், கடிகாரங்கள், பழைய குளிர்பான கண்ணாடி பாட்டில்கள், திரையரங்கு நுழைவுச்சீட்டு, புகைப்பட கேமராக்கள், தையல் மிஷின்கள், சமையலறை பொருட்கள், தமிழ் தினசரி நாட்காட்டி காலண்டர், அரசியல் வாழ்த்து மடல், நூல்கள், வார மற்றும் மாத பருவ இதழ்கள் என 2500 க்கும் மேற்பட்ட வகைகளில் 20,000 மேற்பட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

கோகோ கோலா அன்பான நிறுவனங்கள் வெளியிட்ட பொருட்களை சேகரித்து காட்சிப்படுத்தி உள்ளோம். காட்சியகத்தில் உள்ள
பழைய பொருட்கள் வெறும் பயன்பாட்டுப் பொருட்கள் அல்ல. அவை ஒரு காலத்தின் வாழ்க்கை முறை, பண்பாடு, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக வரலாற்றைப் பதிவு செய்யும் நினைவு சின்னங்கள் ஆகும். இவை மனதிற்கு அமைதியை தருகின்றன வரலாற்றை கண்முன்னே நிறுத்துகின்றன என்றார்.

அருங்காட்சியத்தை பார்வையிட்ட திருச்சி வரலாற்று ஆர்வலர் குழுவினர்
பேசுகையில், முன்னோர் பயன்படுத்திய பல்லாங்குழி, அஞ்சறைப் பெட்டி, வானொலிப் பெட்டி, பழைய சினிமா நுழைவுச்சீட்டு, அரிக்கேன் விளக்கு, மண் பானை, மரப்பெட்டி, பழைய சமையல் பாத்திரங்கள் போன்ற ஒவ்வொரு பொருளும் ஒரு வரலாற்றை கூறுகின்றன. பழைய சமையல் பாத்திரங்கள், அஞ்சறைப் பெட்டிகள், மரப்பெட்டிகள் போன்றவை அக்கால மக்களின் வீட்டு அமைப்பையும் அன்றாட வாழ்க்கையையும் எடுத்துக்காட்டுகின்றன.

குழந்தைப் பருவம் டின் டாய்ஸ் பொம்மைகள், பல்லாங்குழி உள்ளிட்ட பல்வேறு வகையான பொம்மைகள் குழந்தைகளின் பாரம்பரிய விளையாட்டுகளையும் பொழுது போக்கையும் அறிய உதவுகின்றன. பழைய வானொலி, தொலைக்காட்சி பெட்டி, கடிதங்கள், அஞ்சல் உறைகள், அஞ்சல் பெட்டிகள் போன்றவை தொலைதொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன. பழைய திரைப்பட திரையரங்க நுழைவுச் சீட்டுகள், திரைப்பட விளம்பரங்கள் போன்றவை அக்கால திரையரங்க கலாச்சாரத்தையும் திரைப்படங்களின் சமூகத் தாக்கத்தையும் நினைவு படுத்துகின்றன.பழைய தொலைபேசி, அலைபேசி,கேமரா, வானொலி, கடிகாரம் போன்றவற்றிலிருந்து இன்றைய நவீன தொழில்நுட்பம் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

திருமணம், திருவிழா, வழிபாடு, விவசாயம், தொழில் போன்றவற்றுடன் தொடர்புடைய பொருட்கள் அக்கால சமூகத்தின் பழக்கவழக்கங்களையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன. பழைய பொருட்களை பாதுகாப்பது என்பது பழைய பொருளை மட்டும் பாதுகாப்பது அல்ல; அந்த பொருளோடு இணைந்திருக்கும் ஒரு தலைமுறையின் நினைவையும் வரலாற்றையும் பாதுகாப்பதாகும்.
பழைய பொருட்கள் பேசுவதில்லை; ஆனால் அவற்றைப் புரிந்துகொள்ளும் போது, அவை ஒரு தலைமுறையின் முழு வாழ்க்கை வரலாற்றையும் நமக்குச் சொல்லுகின்றன என்றனர்.

செய்திகள் ; விஜயகுமார் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed