ஸ்ரீவில்லிபுத்தூரில்
ரசிகமணி டி.கே. சி. நினைவு விழா ;
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சொந்த ஊராகக்கொண்டிருந்த தமிழ் இலக்கிய ஆளுமையான டி.கே.சி.யின் நினைவு நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தமிழ் இலக்கியத்தில் சிறந்த விமர்சகர் என்றும், கம்ப ராமாயணத்தை சிறப்பான முறையில் விமர்சித்து, “ரசிகமணி” என்ற பட்டம் பெற்ற டி.கே. சிதம்பரநாத முதலியாரின் வாரிசுகளும், பென்னிங்டன் நூலகக்குழுவும் ஒன்று சேர்ந்து, டி.கே. சி. நினைவு விழாவை ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகக் கலையரங்கில் நடத்தினார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில், டி.கே.சி. யின் எள்ளுப்பேத்தி செல்வி டி. தங்கம்மாள், இறை வணக்கப் பாடலைப் பாடினார். எழுத்தாளரும், வழக்கறிஞருமான எஸ். ரமேஷ் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். பென்னிங்டன் கமிட்டியின் உப தலைவர் வி. முத்து பட்டர் துவக்க உரை நிகழ்த்தி வந்திருந்த முக்கிய விருந்தினர்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து காந்தியவாதியான டி.டி. திருமலையின் சீடர் கி. மோகன் பேசினார். முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாராஜனின் மகன் ஆடிட்டர் சிதம்பரம், ரசிகமணியின் பேரன் தீத்தாரப்பன் ஆகியோர் டி.கே.சி.யின் இலக்கியப் பணிகளைக் குறிப்பிட்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். பட்டிமன்றப் பேச்சாளர் சிவனணைந்த பெருமாள் டி.கே.சி. பற்றிய கவிதை ஒன்றை இசையுடன் பாடினார். டி.கே.சி. யின் குடும்பத்தினர், பல அரிய புத்தகங்களை பென்னிங்டன் நூலகத்துக்கு அன்பளிப்பாகத் தந்தனர். ஆடிட்டர் சிதம்பரம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் ராஜாராம் ஆகியோர் கேள்வி-பதில் உரையாடல் பாணியில் டி. கே.சி. யின் தமிழ்ப் பணிகளையும், அவரது வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களையும் நினைவு கூர்ந்தனர்.
கம்பம் இலக்கியப் பேரவை நடத்திய போட்டியில், தனது கட்டுரை நூலுக்காக முதல் பரிசு வென்ற ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ் கௌரவிக்கப்பட்டார். இறுதியில், பென்னிங்டன் கமிட்டியின் செயலாளர் தொழிலதிபர் ஏ.எம்.எம் ராதா சங்கர் நன்றி கூறினார்.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
