இரண்டு வருடங்களாக கோரிக்கை விடுத்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு…
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது நங்குடி கிராமம், இந்த கிராமப் பகுதியில் முருகன் கோவில் உள்ளது. அதன் பின்புறம் பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாய விளைநிலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பல்வேறு பணிகளை மேற்கு கொண்டு வருகின்றனர்.

அதுபோல், இந்த பகுதி சிறுவர்கள் விளையாட செல்லும் பகுதியாக இருந்து வருகிறது. மேலும், இந்த பகுதியில் கால்நடை அதிகளவில் மேய்ந்து வருகிறது, இந்த நிலையில் இப்பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பியானது தலைமேல் தொட்டு செல்லும் விதத்தில் மிக ஆபத்தான விதமாக தாழ்வாக செல்கிறது. இந்த மின் கம்பியை கடக்கும் போதே நமது தலையில் உரசி உடனடி உயிராபத்து ஏற்படுத்தக்கூடிய அளவில் இருக்கிறது.

இது குறித்து, பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்,
அதுபோல், இந்த பகுதியில் உள்ள வீதிகளிலும் அனைத்து மின் கம்பிகளுமே இதேபோன்று இருந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளிகள், கால்நடை மேய்ப்போர் மற்றும் குடியிருப்பு வாசிகள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்த தாழ்வாக செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை சரியான உயரத்தில்
அமைத்து தரவேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர், அதுபோல் பல முறை புகார் அளித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.

எனவே இந்த தாழ்வாக செல்லும் உயர் மின் கம்பியால் இப்பகுதி மக்கள், கால்நடைகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே உடனடியாக தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை இழுத்து கட்டி சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
எதிரொலி / 8939476777
