கடந்த 2000 முதல் 2019, அதாவது கொரோனாவுக்கு முன்பு வரை தங்கம் விலை இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 11.6% உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு தங்கம் விலையேற்றம் சற்ற வேகமெடுத்தாலும் கூட 2024 வரை ஆண்டுக்குச் சராசரியாக 12.1% மட்டுமே உயர்ந்தது. ஆனால், டிரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்ற உடன் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. கடந்த 2025 முதல் இப்போது வரை மட்டும் தங்கம் விலை கிட்டத்தட்ட 94% உயர்ந்துள்ளது. அதாவது தங்கம் விலை இரண்டே ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இதனால் தங்கத்தை வாங்க நினைப்போர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய் இருக்கிறார்கள்.
விலையை முடிவு செய்வது யார் பொதுவாகச் சர்வதேச சந்தையில் தங்கம் விலையைப் பொறுத்தே இந்தியாவிலும் தங்கம் விலை இருக்கும். லண்டனில் உள்ள தங்க மார்கெட் தான் உலகிற்கே முன்னோடி. அங்கு ஒரு நாளுக்கு இரண்டு முறை தங்கம் விலை மாற்றி அமைக்கப்படும் நிலையில், அதற்கேற்ப இந்தியாவிலும் தங்கம் விலை மாற்றி அமைக்கப்படும். இந்தியாவின் தங்கம் விலையை மும்பையில் உள்ள சாவேரி பஜார் தான் நிர்ணயம் செய்கிறது.
இரண்டு முறை முன்பெல்லாம் தினசரி ஒரு முறை மட்டுமே தங்கம் விலை மாற்றி அமைக்கப்படும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல நாட்கள் இரண்டு முறை மாற்றி அமைக்கப்படும் அளவுக்குக் கூட தங்கம் விலை உயர்ந்திருந்தது. இன்று அதையும் விட மோசமாக 3 மணி நேரத்திற்குள் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கம் 2800 ரூபாய் உயர்ந்த நிலையில், பகலில் மீண்டும் ரூ.1320 உயர்ந்தது. அதாவது தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,15,320க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.14,415க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஏற்றமே இதற்குக் காரணமாகும். காலை 9 மணியளவில் 4800 டாலரை கடந்த தங்கம், வெறும் 3 மணி நேரத்தில் 4880 டாலர் வரை உயர்ந்தது. கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் மிரட்டல், அமெரிக்க- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் போர் அச்சம் ஆகியவை பிரதானக் காரணமாக இருக்கிறது. மேலும், டாலர் மதிப்பும் சரியும் நிலையில், அதுவும் தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது.
