:தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ‘தீக்கதிர்’ நாளிதழ் செய்தியாளரை பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்க முற்பட்டு மிரட்டிய துணை காவல் கண்காணிப்பாளர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.
நடந்த சம்பவம்:
ஜூலை 1-ம் தேதி தியாகதுருகத்தில், மத்திய அரசின் வி.பி.ஜி ராம்ஜி புதிய சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை செய்தி சேகரிக்கச் சென்ற ‘தீக்கதிர்’ செய்தியாளர் சசிக்குமாரை, பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி செல்வம் பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.


மேலும், செய்தியாளரை ஒருமையில் பேசி தாக்க முற்பட்டதோடு, உடன் இருந்த காவலர்களை அழைத்து “இவனை கைது செய்யுங்கள்” என மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் மீதும் அவதூறு:
அத்துடன் நில்லாமல், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர்களையும் அவதூறாக பேசிய டிஎஸ்பி செல்வம், “மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றி அழைத்து வரும் அனைவரையும் கைது செய்து சிறையில் அடையுங்கள்” என அதிகாரத் திமிருடன் பேசியதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்:,
பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும், ஜனநாயக கடமையாற்றும் செய்தியாளரை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட டிஎஸ்பி மீது உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்தவர்கள்:
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாவட்ட தலைவர் மாசிலாமணி, செயலாளர் பெரியசாமி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்புச் செயலாளர் ஆதி சுரேஷ், நிர்வாகி குருசாமி உள்ளிட்டோர் புகார் அளித்தனர்.


செய்திகள் ; சசி குமார் / எதிரொலி / 8939476777
