திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ‘நபாட்டி’ (Nabati) நிறுவனத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் நிரந்தர ஊழியர்களுக்கு வெறும் ₹15,000 மட்டுமே மாத சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய விலைவாசி உயர்வில் இந்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியாத சூழலில், தங்களுக்கு ₹33,000 ஊதிய உயர்வு வழங்கக் கோரி ஊழியர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால், கோரிக்கையை ஏற்பதற்குப் பதிலாக, போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரில் 39 நிரந்தர தொழிலாளர்களை நிர்வாகம் அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.

தற்போது நிரந்தரப் பணியாளர்களை நீக்கிவிட்டு, ஒப்பந்த தொழிலாளர்களை (Contract Labours) வைத்து ஆலையை நிர்வாகம் இயக்கி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலையிழந்த தொழிலாளர்கள் ஆலை வாயில் முன்பாக அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வளவு நிகழ்ந்தும் நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் மவுனம் காத்து வருகிறது.

உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் நலத்துறையும் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
