விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.09.2026) பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த பூமியான விருதுநகர் மாவட்டத்திற்கு 26-ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டமைக்காக பெருமை கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விருதுநகர் மாவட்டம் தொழில் மற்றும் விவசாயம் என இரண்டிலும் சிறந்து விளங்குகிறது. நீரின்றி ஏதும் இல்லை என்பதால், என்னுடைய முதல் பணியாக நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், ஏற்கனவே உள்ள மழை நீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகளையும் புனரமைத்து மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுடைய பங்களிப்பு இல்லாமல் எதுவும் நீண்ட காலத்திற்கு நிலைத்து இருக்காது. ஆகையால், இதை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து சென்று அனைவருடைய பங்களிப்புடன் ஒருங்கிணைத்து இதை செயல்படுத்துவோம். விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள் அனைத்தும் தகுதியான ஒரு விவசாயி கூட விடுபடாமல் அவர்களுக்கு சென்று சேர்வதற்கான முயற்சிகள் முழுமையாக எடுக்கப்படும்.

இரண்டாவதாக, மாவட்டத்தை பொறுத்த அளவில் தீப்பெட்டி, அச்சு, கைத்தறி, உலக அளவில் புகழ் பெற்ற சிவகாசி பட்டாசு உள்ளிட்டவைகளில் அங்கீகாரத்தை வைத்துள்ளோம். இதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றால் அதற்கான சில வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. தீபாவளி திருநாள் அனைவருக்கும் கொண்டாட்டமாக இருப்பதைப் போல, இங்கு இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கும் ஒரு பாதுகாப்பான சூழலைக் கொடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும். அதை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவோம்.

மூன்றாவதாக, கர்ப்பிணி பெண்கள், வளரிளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, முதியோர்களின் மனநிலை மற்றும் உடல் நலம் கருதிய சிறப்பு திட்டங்கள் எடுக்கப்படும்.

நான்காவதாக வேலை வாய்ப்பு பொறுத்த வரையில் தமிழக அரசின் மூலம் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. படித்த தகுதியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கியமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவான எப்பொழுதும் ஒரு நேர்மையான, மக்கள் எளிதாக அணுகக்கூடிய மாவட்ட ஆட்சித்தலைவராக வெளிப்படை தன்மையுடன் நான் செயல்படுவேன். பொதுமக்கள் எனது அலுவலக தொலைபேசி எண்ணான 94441-84000 – ல் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்கும் போது அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, இடைநிற்றலை குறைத்து, தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண்ணிலும் முன்னணி மாவட்டமாக உருவாவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், பத்திரிக்கைத்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மவாட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *