விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சர்வ சமுத்ர அக்ரஹாரத்தில் உள்ள சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் திருப்பாவை முற்றோதல், கோலாட்டம், பஜனை, சீர் வரிசை எடுத்து வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக பல்வேறு பகுதியில் இருந்து பங்கேற்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோபிகைகளாக ஆண்டாளை பல்லக்கில் சுமந்தபடியும், பெண்கள் கோலாட்டம் ஆடியும், ஆரத்தி எடுத்தும் பஜனை பாடியும் சீர் தட்டு ஏந்தியும், கண்ணன் வேடமிட்ட சிறுவர்கள் உரி அடித்தும் ஆண்டாள் தாயாரை வரவேற்றனர். கோயிலில் காத்திருந்த பக்தர்கள் திருப்பாவை பாராயணத்தை பாடினர். ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் ஆண்டாள் பெருமைகள், திருப்பாவையின் முக்கியத்துவம் பற்றி பேசி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

ஏற்பாடுகளை அகத்திய தமிழ்ச்சங்கம், கோதை நாச்சியார் தொண்டர் குழாம், சந்தான வேணுகோபால சுவாமி கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
