தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் காந்தி மண்டபம் பகுதியில், உயர் மின் அழுத்த மின்கல பெட்டி (EB Junction Box) ஒன்று நீண்ட நாட்களாகத் திறந்த நிலையில் காணப்படுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிகம் நடமாடும் இந்தப் பகுதியில், மின்கலப் பெட்டியின் கதவுகள் உடைந்த நிலையில் திறந்தே காணப்படுகின்றன.


உள்ளே உள்ள உயர் அழுத்த மின் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் இருப்பதால், அறியாமல் யாரேனும் தொட்டாலோ அல்லது சிறு குழந்தைகள் விளையாடும்போது கையை வைத்தாலோ உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “காந்தி மண்டபம் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மின்வாரிய துறையினரின் அலட்சியத்தால் இந்த மின்கலப் பெட்டி பல நாட்களாகச் சீரமைக்கப்படாமல் உள்ளது. எதிர்பாராத விதமாக விபரீதம் ஏதும் நடப்பதற்குள், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, திறந்திருக்கும் மின்பெட்டியைப் பாதுகாப்பாக மூட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.


சுற்றுலாத் தலத்தின் அழகையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த ஆபத்தான மின்பெட்டியை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777
